அடப்பாவி.. இதுக்குப் பேருதான் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துறதா?
பிரேசிலில் கரப்பான்பூச்சிக்காக ஒரு நபர் தோட்டத்தை கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலியா: பிரேசிலில் கரப்பான் பூச்சியைக் கொல்ல தன் தோட்டத்தையே ஒருவர் வெடிக்க வைத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா? இது நாம் அடிக்கடி கேட்டு பழக்கப்பட்ட பழமொழி. ஆனால் இந்தப் பழமொழி இந்த பிரேசில்காரருக்கு தெரியவில்லை போல. அதனால் தான் கரப்பான்பூச்சியைக் கொல்வதற்காக தன் தோட்டத்தையே இவர் வெடிக்க வைத்துள்ளார்.
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல். இதில், சீசர் ஷ்மிட்ஸ் (48) என்ற நபர் தன் கொல்லைப்புறத்தில் உள்ள தோட்டத்தில் கரப்பான்பூச்சிகளை விரட்ட முயற்சி செய்கிறார். கூட்டை அழிக்க துளைக்குள் பெட்ரோல் ஊற்றி பின் அதன் மீது தீப்பெட்டி குச்சிகளை உரசி வீசத் தொடங்குகிறார். மூன்றாவது குச்சியில் தீ பற்றி புல்வெளி முற்றிலும் வெடித்து சிதறுகிறது. ஆனால், கடைசி வரை அவரால் கரப்பான் பூச்சியின் கூட்டை அழிக்க முடியவில்லை.
இந்த வீடியோவை இதுவரை சுமார் 2.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தொடர்ந்து இந்த வீடியோ நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.
Dude went to the Yosemite Sam school of how to deal with critters. pic.twitter.com/40ElxsFPem
— Klara Sjöberg (@klara_sjo) October 20, 2019
நடந்த சம்பவம் குறித்து சீசர் நியூயார்க் போஸ்ட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், “எங்கள் தோட்டத்தில் ஏராளமான கரப்பான் பூச்சிகள் இருப்பதாக என் மனைவி புகார் தெரிவித்தார். கரப்பான் பூச்சியின் கூட்டை அழிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டதால் இந்த முயற்சியை செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தீவிபத்திற்குப் பிறகு தற்போது சீசர் தனது புல்வெளியை சுத்தப்படுத்தி மீண்டும் சரிபடுத்தி விட்டதாக தற்போது அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனாலும் கரப்பான்பூச்சிக்காக அவர் தனது தோட்டத்தையே கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.