சுடச்சுட.. எரிமலையில் உட்கார்ந்து.. ‘எரிமலைக் குழம்பு பீட்சா’.. கேட்கும்போதே மெர்சலா இருக்கே!
கவுதமாலா: வெடித்து சிதறும் எரிமலையில் பீட்சா கடை திறந்து செமையாக கல்லா கட்டி வருகிறார் கவுதமாலா நாட்டில் ஒருவர்.
புதுமை விரும்பிகளுக்கு இவ்வுலகில் பஞ்சமே இல்லை. அதுவும் தொழில் முனைவோர் பலர் தங்களுடைய தொழிலில் புதுமைகளைப் புகுத்தி அசத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் டேவிட் கார்சியா எனும் 34 வயது நபர் ஒருவர் வெடிக்கும் எரிமலையில் பீட்சா செய்து, அதனை விற்பனை செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பீட்சா விற்பனையை அவர் தயாரித்து வருகிறார்.
பெரும் சத்தம்.. 6 கிமீ உயரத்திற்கு பரவிய கரும் புகை.. இந்தோனேசியாவில் வெடித்தது ராட்சச எரிமலை.. ஷாக்
கவுதமாலா எரிமலை
கவுதமாலாவில் உள்ள கார்சியா மலையில் எரிமலை ஒன்று வெடித்து சிதறிக் கொண்டிருக்கிறது. தற்போதும் அந்த எரிமலையிலிருந்து எரிமலை குழம்புகள் வழிந்தோடுகிறது. இதைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகின்றனர். இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி புதுமையான வகையில் பீட்சா தயாரித்து அசத்தி வருகிறார் டேவிட்.
எரிமலை பீட்சா
பொதுவாக பீட்சாக்களை ஓவனில் வைத்து தயாரிப்பார்கள். சில வீடுகளில் தோசைக்கல் பீட்சாக்கூட கேள்விப் பட்டிருப்போம். அவற்றில் இருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது டேவிட் செய்யும் இந்த எரிமலைக் குழம்பு பீட்சா.
தயாரிப்பு முறை
முதலில் ஒரு இரும்பு பாத்திரத்தில் மாவை பிசைந்து பீட்சா செய்வதற்கு ஏதுவாக தட்டையாக அதனை தட்டி வைக்கிறார் டேவிட். பின்பு அதில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து தயார் செய்து கொள்கிறார். கடைசியில் இந்தக் கலவையை எரிமலை குழம்பின் மீது வைத்து சுடச்சுட பீட்சாவாக தயாரிக்கிறார்.
தனித்துவமான சுவை
எலக்ட்ரிக் ஓவனில் தயார் செய்யப்படும் பீட்சா போல் இல்லை இது என்கிறார்கள் இதனை சுவைத்தவர்கள். இதன் சுவையே தனித்துவமாக இருக்கிறது என்கிறார்கள். மிரட்சியும், பிரமிப்பும் தரும் எரிமலைப் பகுதியில் எரிமலைக் குழம்பில் தயாரித்து சுடச்சுட பீட்சா கிடைக்கிறது என்பதும், அதனை அங்கேயே வைத்து சாப்பிடலாம் என்பதும் ஆச்சர்யமான விசயம் தானே.
வரவேற்பு
எரிமலையின் அருகில் உட்கார்ந்து கொண்டு இப்படி வித்தியாசமாக பீட்சா சாப்பிடுவது புதுமையான அனுபவத்தை தருவதாக கூறுகிறார்கள் சுற்றுலாப் பயணிகள். இதனாலேயே நாளுக்கு நாள் டேவிட்டின் எரிமலைக் குழம்பு பீட்சாவிற்கு அப்பகுதியில் வரவேற்பு அதிகரித்து வருகிறதாம். சாகசப் பிரியர்களுக்கு இந்த பீட்சா அனுபவம் அலாதியான மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் டேவிட்.