அயர்லாந்து விமானத்தில் பயணிகளுக்கிடையே மோதல்... இளைஞர் கடித்துக் கொலை... பெண் பயணி கைது!
டூப்ளின்: அயர்லாந்து விமானத்தில் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவர் கடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் இருந்து டூப்ளினுக்கு 165 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் அயர்லாந்து விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த 24 வயது பிரேசில் இளைஞர் ஒருவருக்கும், அவரது அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதில், ஆத்திரமடைந்த பெண் பயணி, இளைஞரைக் கடித்துக் குதறினார். வலியால் அலறிய அந்த இளைஞர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. ஆனால், அவரது மயக்கம் தெளியவில்லை.
இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்காக கார்க் நகரில் விமானத்தை தரையிறக்கினார் விமானி. உடனடியாக காயம்பட்ட இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைக் கடித்துக் கொன்றதாக மோதலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரது சூட்கேசில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் 2 கிலோ எடையுள்ள போதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பரபரப்பு சம்பவங்களுக்கு இடையே விமானத்தில் பயணம் செய்த மீதமுள்ள பயணிகள் பேருந்து மூலமாக டூப்ளின் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.