'கேஎப்சி' சிக்கனுக்கு ஆசைபட்டு உயிரை விட்ட இந்தோனேசியர் !
ஜகர்தா: இந்தோனேசியாவில் உள்ள கேஎப்சி உணவகத்தில் சிக்கன் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் பலியாகிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் சிக்கன் சாப்பிடும் போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த போட்டியை உலக அளவில் பிரபலமாக உள்ள சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் ‘கெண்டகி பிரைட் சிக்கன்' (Kentucky Fried Chicken) நடத்தியது.
இந்த போட்டியில், குறுகிய நேரத்தில் யார் அதிகமான சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுகின்றனரோ, அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று கே.எப்.சி-யின் சிக்கனை வெளுத்து வாங்கிய 3 பேர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
45 வயதான அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சிக்கன் பீஸ் தொண்டையில் சிக்கி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் ஜகர்தாவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.