சவுதியில் கார் கதவை மூடாததால் மனைவியை விவாகரத்து செய்த நபர்
ரியாத்: சவுதியில் கார் கதவை மூடாததால் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் சுற்றுலா சென்றார். அவர்கள் வீடு திரும்பியபோது வாசலில் காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்து அந்த நபரின் மனைவி குழந்தைகளுடன் இறங்கி வீட்டுக்குள் சென்றுள்ளார். இதை பார்த்த அந்த நபர் கார் கதவை மூடிவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த பெண் நீங்கள் காரில் தானே இருக்கிறீர்கள், நீங்களே கதவை மூடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நீ கதவை மூடவில்லை என்றால் வீட்டுக்குள் நுழையாதே என்று கூற அந்த பெண் தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
உறவினர்கள் வந்து அழைத்தும் பொறுப்பில்லாத நபருடன் வாழ முடியாது என்று கூறி கணவன் வீட்டுக்கு வர அந்த பெண் மறுத்துள்ளார். வளைகுடா நாடுகளில் பஹ்ரைனை அடுத்து சவுதியில் தான் அதிக அளவில் விவாகரத்து சம்பவங்கள் நடக்கிறது.
சவுதியில் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 30 ஆயிரம் விவாகரத்து நடந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 82 விவாகரத்தும், மணிக்கு 3 விவாகரத்தும் நடந்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.