டமால் டுமீல்.. பூட்டிய வீட்டில் துப்பாக்கி சத்தம்.. ஓடி வந்த போலீஸ், மீடியா.. க்ளைமாக்ஸ் செம காமெடி
ஜெர்மனி நாட்டில் அதிக சத்தத்தில் டிவியில் சண்டை படத்தை ஓடவிட்டு அசந்து தூங்கிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெர்லின்: ஜெர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணையில் துப்பாக்கி சத்தத்திற்கான காரணம் தெரியவந்தது. அதை கேட்டு மக்கள் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ந்து போயினர்.
ஜெர்மனி நாட்டில் ஓடும் ரைன் நதிக்கரையில் அமைந்திருக்கும் 2,000 ஆண்டுகள் தொன்மையான நகரம் கொலோன். எனவே அந்நாட்டின் கலாச்சார மையமாக திகழ்கிறது கொலோன். அந்த நகரில் தான் இந்த விநோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை 7.30 மணி அளவில் கொலோன் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இயந்திர துப்பாக்கிகள் சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. அந்த சத்தம் வெகு நேரம் தொடர்ந்ததால் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
2024 தேர்தலில்.. ராகுல் காந்தியால்.. காங்.குக்கு வெற்றி தேடித் தர முடியாது.. அதிருப்தி தலைவர்!
பதற்றம்
விரைந்து வந்த போலீசாரும், கமாண்டே படை வீரர்களும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பக்கத்தில் உள்ள கட்டடங்களின் மேல் ஏறி எதிர்தாக்குதலுக்கு தயாரானார்கள். ஒரு மிகப்பெரிய பரபரப்பு அந்த பகுதி முழுவதும் தொற்றிக்கொண்டது. போதாக்குறைக்கு செய்தி சேனல்களும் வரிசைக்கட்டி நேரலை செய்ய தொடங்கியதால் தேசிய அளவில் ஒரு பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
பெரிய சம்பவம்
ஏதோ ஒரு பெரிய சம்பவம் நடக்கப் போகிறது என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். போலீசார் வந்த பிறகு கூட துப்பாக்கி சுடும் சத்தம் நிற்கவில்லை. அவ்வப்போது டிடிஎஸ் எஃப்பெக்டில் ஒலித்த துப்பாக்கி சத்தம் வெளியே இருந்தவர்களுக்கு பீதியை கிளப்பியது.
பேரதிர்ச்சி
ஒரு நீண்ட முயற்சிக்கு பிறகு பூட்டு தொழிலாளி ஒருவரின் உதவியுடன் துப்பாக்கி சத்தம் கேட்ட அந்த அப்பார்ட்மெண்டை திறந்து போலீசார் உள்ளே நுழைந்தனர். அங்கு அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அதிர வைத்த இளைஞர்
அந்த வீட்டினுள் அதிக சத்தத்தில் டிவியில் ஆக்ஷன் படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்க அதன் முன்னே உள்ள சோபாவில் ஒரு நபர் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்து கடுப்பான போலீசார், அந்த நபரை சகல மரியாதையுடன் எழுப்பி, போலீஸ் பாணியில் தூக்கம் கலையச் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
மக்கள் ஏமாற்றம்
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சிரிப்பதா? அழுவதா? என தெரியாமல் புலம்பிக்கொண்டே வேலைக்கு கிளம்பிச் சென்றனர். ஊடகங்களுக்கு இந்த செய்தி ஒரு சொத்தையான செய்தி என விரித்த குடையை எல்லாம் மடித்து நேரலையை முடித்துக்கொண்டன.
புலம்பிய போலீசார்
ஒரு நகரையே பரபரப்பாக்கிவிட்டு ஹாயாக தூங்கிய அந்த நபரை போலீசார் எச்சரிக்கை செய்து விடுவித்தனர். பாவம் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? "பயபுள்ள காலங்காத்தால நம்மல இப்டி பதற வெச்சுட்டானே", என புலம்பியபடி போலீசாரும் அடுத்த வேலையை பார்க்க புறப்பட்டனர்.