முதலையின் கண்ணைக் குத்தி, வாய்க்குள் சிக்கிய மகனைக் காப்பாற்றிய தந்தை
ஹராரே: முதலை வாய்க்குள் சிக்கிய தன் மகனை கைகளில் ஆயுதம் ஏதும் இல்லாத போதும் போராடி மீட்டுள்ளார் ஜிம்பாப்வேவைச் சேர்ந்த பாசக்கார தந்தை ஒருவர்.
வெறும் கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்ற பழமொழி உழைப்பிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்த ஜிம்பாப்வே தந்தையின் வீரச்செயலுக்குப் பொருந்துகிறது.
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள போக்குவரத்து வசதியில்லாத ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர். இவர் தனது 11 வயது மகன் தபிவாவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட தங்களது கிராமத்துக்கு சென்றுள்ளனர். அப்போது வழியில் குறிக்கிட்ட ஒரு ஆற்றைக் கடக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக முதலை ஒன்றிடம் சிக்கிக் கொண்டான் தபிவா.
முதலை வாய்க்குள் சிக்கிய அவனை அப்படியே கடித்து தின்ன முயன்றது. இக்கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த அவனது தந்தை தபாட்ஷவாவிடம் ஆயுதம் எதுவும் இல்லை. ஆனபோதும் தன் மகனை எப்படியாவது முதலையிடமிருந்து காப்பாற்றி விட வேண்டும் என எண்ணிய தபாட்ஷ்வா, ஆக்ரோஷத்துடன் முதலை மீது பாய்ந்துள்ளார்.
முதலையின் முதுகில் அமர்ந்த தபாட்ஷ்வா, அதன் தாடையை அகற்ற முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.அதனைத் தொடர்ந்து அதன் தலையில் தனது கையால் ஓங்கி குத்தியுள்ளார். ஆனால், முதலை அசைந்து கொடுக்கவில்லை.
இறுதியில், பலங்கொண்ட மட்டும் ஓங்கி அதன் கண்ணில் குத்தி கிழித்துள்ளார். இதனால் நிலை தடுமாறிய முதலை தனது வாயை திறக்க, உடனடியாக அதன் வாய்க்குள் சிக்கிய சிறுவன் தபிவாவை பத்திரமாக மீட்டுள்ளார் தபாட்ஷா.
ஆனால் முதலை கடித்ததில் அவனது ஒரு கால் துண்டானது. தபாட்ஷ்வா கையிலும் ரத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.