‘பாவம் உங்கிட்ட வேற காசு இல்லையா?’.. திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த நல்ல திருடன்!
சீனாவில் திருடிய பணத்தை திருடனே திருப்பிக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பீஜியிங்: சீனாவில் திருடன் ஒருவன், தான் திருடிய பணத்தை சம்மந்தப்பட்ட பெண்ணிடம் திருப்பிக்கொடுத்த அதிசயமான சம்பவம் நடந்துள்ளது.
சீனாவை சேர்ந்த லி என்ற பெண் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம் சென்றார். அவர் பணத்தை எடுத்து முடித்ததும், ஏடிஎம்க்குள் நுழைந்த திருடன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி, லியிடம் இருந்த பணத்தை பிடிங்கிக்கொண்டான்.
பிறகு அந்த திருடன் என்ன நினைத்தானோ என்னவோ தெரியவில்லை. லியின் வங்கி கணக்கில் எவ்வளவு மீதித்தொகை இருந்தது என்பதை காண்பிக்க கூறினான். அவரும் தனது அக்கவுண்ட் பேலன்சை காட்டினார்.
லியின் வங்கி கணக்கில் பணம் ஏதும் இல்லை. இதனால் மனம் மாறிய திருடன், தான் பறித்த பணத்தை லியிடமே மீண்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். இவ்வளவு நியாமான திருடனா என லி ஆச்சரியப்பட்டார்.
ஆனால் ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அந்த திருடனை போலீசார் கைது செய்தனர். அந்த திருடன் மீது, கத்தியை காட்டி பணத்தை பறித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.