போலி வெடிகுண்டு பெல்ட்டைக் காட்டி எகிப்து விமானம் கடத்தல்... விசாரணையில் அம்பலம்
கெய்ரோ: எகிப்து விமானத்தை கடத்திய நபர் அணிந்திருந்தது போலி வெடிகுண்டு பெல்ட் என எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து நேற்று 81 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் கெய்ரோ கிளம்பிய விமானத்தை எகிப்தை சேர்ந்த சயிப் எல் தின் முஸ்தபா என்பவர் கடத்திச் சென்று சைப்ரஸில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் வலுக்கட்டாயமாக தரையிறக்க வைத்தார்.
அப்போது அவர் தனது உடலில் வெடிகுண்டுகள் கட்டியிருப்பதாகக் கூறி மிரட்டினார். அதனைத் தொடர்ந்து எகிப்து அதிகாரிகள் முஸ்தபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் 4 சிப்பந்திகள் மற்றும் 3 பயணிகளை தவிர்த்து மீதமுள்ளவர்களை விடுவித்தார். இறுதியில் விமானத்தில் இருந்த 7 பேரும் தப்பித்த பிறகு அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், உடலில் போலி வெடிகுண்டு பெல்ட் கட்டி சயிப் விமானத்தைக் கடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சைப்ரஸ் பாதுகாப்பு துறையின் விசாரணையில் விமானத்தை கடத்தியவன் அணிந்திருந்தது போலி வெடிகுண்டு பெல்ட் என்றும், அதில் எவ்விதமான வெடிப்பொருட்களும் இல்லை என்று தெரியவந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு, விமானத்தைக் கடத்திய சயிப், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், விமானத்தைக் கடத்திய போது, என்ன கோரிக்கை விடுப்பது என்றே தெரியாமல் மாறி, மாறி பேசியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.