கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட இடையூறாக இருந்த 2 வயது குழந்தையை கொன்ற தந்தை
டெக்சாஸ்: அமெரிக்காவில் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட இடையூறாக இருந்த 2 வயது பெண் குழந்தையை தந்தையே கொலை செய்த கொடுமை நடந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வடுகாவை சேர்ந்தவர் ஆந்தோனி மைக்கேல் சான்டர்ஸ்(31). கடந்த டிசம்பர் மாதம் அவரது மனைவி 2 வயது மகள் எல்லி மற்றும் 5 வயது மகனை மைக்கேலின் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார்.
மைக்கேல் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். இந்நிலையில் வெளியே சென்ற அவரது மனைவி வீடு திரும்பியபோது எல்லி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். உடனே குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் கண்ணில் காயம் இருந்ததுடன், அதன் காதில் ரத்தம் வந்திருந்தது, மேலும் குழந்தையை யாரோ கடித்ததன் தடம் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட இடையூறாக இருந்ததால் மைக்கேல் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் கையை வைத்து அழுத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து மைக்கேல் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.