ஒரு சீஸ் பர்கருக்காக அண்ணனை சுட்டுக் கொன்ற வாலிபர்
புளோரிடா: அமெரிக்காவில் சீஸ் பர்கருக்காக வாலிபர் ஒருவர் தனது அண்ணனை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் இருக்கும் செயின்ட் கிளவுட் நகரை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன்டார்ப்(25). அவரது அண்ணன் நிக்கோலஸ் மிட்டன்டார்ப்(28). கடந்த 5ம் தேதி இரவு ஒரு சீஸ் பர்கருக்காக சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே பெஞ்சமின் துப்பாக்கியை எடுத்து தனது அண்ணனின் மார்பில் சுட்டார். இதில் நிக்கோலஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெஞ்சமின் போலீசாருக்கு போன் செய்து கோபத்தில் தனது அண்ணனை சுட்டுக் கொன்றுவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிக்கோலஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப்பதிவு செய்து பெஞ்சமினை கைது செய்தனர்.
பெஞ்சமின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு மகன்களை இழந்துவிட்டதாக பெஞ்சமினின் தாய் தெரிவித்துள்ளார்.