சொர்க்கத்துல விளையாடனும்ல... நண்பரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சீனர்
பெய்ஜிங்: குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த 54 வயது தொழிலாளி ஒருவர், தன்னுடன் சொர்க்கத்தில் செஸ் விளையாட எனக் கூறி தனது நண்பரைக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்த லியாவோ என்றத் தொழிலாளிக்கு வயது 54. ‘செஸ்' விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தினமும் தனது பக்கத்து வீட்டு 57 வயது நண்பருடன் ‘செஸ்' விளையாடுவது வழக்கமாம்.
இந்நிலையில், சமீபத்தில் லியாவோவின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே இவரது வீட்டின் அருகேயுள்ள காலி நிலத்தில் நண்பரின் பிணமும் கிடந்தது.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட லியாவோவின் பிணம் அருகே அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அந்தக் கடிதத்தில், ‘சொர்க்கத்துக்கு செல்லும் எனக்கு, அங்கு ‘செஸ்' விளையாட எனக்கு துணை தேவை. எனவே நான் தற்கொலை செய்வதற்கு முன்பு நண்பரை கொலை செய்து விட்டேன். இனி நாங்கள் இருவரும் சொர்க்கத்தில் ஜாலியாக ‘செஸ்' விளையாடுவோம்' என எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நண்பரைக் கொலை செய்தது லியாவோ என்பது உறுதியானது.