நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசா... மாஸ் காட்ட காத்திருக்கும் அமெரிக்கா!
பலவருடங்களுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது நாசா.
வாஷிங்டன்: பலவருடங்களுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது நாசா. இன்று அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார் அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நிலவுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் என்ற நாய் ஒன்றை அனுப்பி வெற்றிகரமாக திரும்பக் கொண்டு வந்தது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் விண்வெளித் துறையான நாசா மனிதர்களை அனுப்பும் முயற்சியை கையில் எடுத்தது.
நிலவில் அமெரிக்க கொடி
பெரும் முயற்சிகளுக்கும், பல தோல்விகளுக்கும் அடுத்து 1969 ம் ஆண்டு ஜூலை மாதம் 20 தேதி வெற்றிகரமாக மனிதர்களை அனுப்பி , அங்கு அமெரிக்க கொடியை நட்டது. உலக வரலாற்றில் இது இன்னமும் பெரிய மைல் கல்லாக உள்ளது. நீல் ஆம்ஸ்ட்ராங் பெயர் சரித்திரத்தில் இடம் பிடித்தது.
நிலவு ஆய்வில் இஸ்ரோ
இதையடுத்து நிலவின் மீதான ஆசையை குறைத்துக் கொண்ட நாசா செவ்வாய் கிரகத்தின் மீது தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தது. இந்தியாவின் இஸ்ரோ தவிர மற்ற எந்த நாடுமே நிலவில் ஆராய்ச்சி செய்யாமல் அமைதி காத்து வந்தன. இந்த நிலையில் தற்போது அமெரிக்க மீண்டும் நிலவு ஆராய்ச்சியை கையில் எடுத்துள்ளது.
கொடி மட்டும் நடமாட்டோம்
இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ் " நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாம் கையில் எடுத்துள்ளோம். இந்த முறை வெறும் கொடியை மட்டும் நட்டுவிட்டு வரும் பயணமாக இது இருக்காது. இனி நடக்கப் போகும் அனைத்து வானியல் ஆராய்ச்சிக்கும் இதுதான் தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது '' என்று கூறினார்.
செவ்வாய்க்கு மனிதன்
செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டிருக்கும் நாசா , அதற்கு முன்னூட்டமாக இந்த நிலவுப் பயணத்தை திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தவுடன் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் வேலை ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது நாசா நிறுவனம்.