சொந்த ஊர் போகணும்.. பயணிகளுடன் அரசு பேருந்தை திருடிச் சென்ற இளைஞர் கைது!
மகாராஷ்டிராவில் அரசு பேருந்தை பயணிகளுடன் திருடிச் சென்று விபத்தில் சிக்க வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: மஹாராஷ்டிராவில் டிப்போவில் நின்றிருந்த அரசுப் பேருந்தை பயணிகள் சிலருடன் திருடிச் சென்று, மரத்தில் மோதி விபத்தை உண்டாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பொய்சரில் உள்ள டெப்போவில் பயணிகள் சிலருடன் அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும் டெப்போவின் உள்ளே பணி நிமித்தம் சென்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சபிர் அலி (31) என்ற இளைஞர், பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கினார். இதனால் அப்பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாறுமாறாக பேருந்தை ஓட்டிய சபிர், சிறிது தூரத்தில் இருந்த மரத்தில் மோதினார். இதனால் பேருந்து விபத்தில் சிக்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நல்லவேளையாக உயிர் பிழைத்தோம் என பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறினர்.
அதற்குள்ளாக பேருந்தைத் துரத்தி வந்த அப்பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும், சபீரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் சபீர் பால்கரில் வசித்து வருகிறார் என்றும், உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக அவர் பேருந்தை திருடியதும் தெரிய வந்துள்ளது.
அவர் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் உண்மையிலேயே சொந்த ஊர் செல்லத்தான் அவர் பேருந்தை ஓட்டிச் சென்றாரா அல்லது பயணிகளைக் கொல்லும் திட்டம் ஏதும் வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய தொடர்ந்து சபீரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அவரது மனநிலை தெளிவு குறித்த மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
பேருந்தை திருடிச் செல்ல முற்பட்டு, விபத்து ஏற்பட்ட சம்பவம் பொய்சரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் பேருந்தை திருடிச் செல்வது இது முதல்முறையல்ல, கடந்த 2012ம் ஆண்டு இதே போன்று காலியாக நின்ற அரசு பேருந்தை ஓட்டுநர் ஒருவர் திருடிச் சென்று விபத்துக்குள்ளாக்கியதில், 8 பேர் கொல்லப்பட்டனர், 29 பேர் காயமடைந்தனர். ஏறக்குறைய 24க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சேதமடைந்தது நினைவு கூரத்தக்கது.