5,000 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் எலும்பு முறிவின்றி உயிர் பிழைத்த பெரு விமானப்படை வீரர்
லிமா: பெரு நாட்டில் விமானப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் 5 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் எலும்பு முறிவு இன்றி உயிர் பிழைத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அமாசிபுயன் கமாரா(31) என்பவர் ராணுவ விமானத்தில் இருந்து குதித்தார். அப்போது அவர் தனது பாராசூட்டை விரிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அப்போது அதில் இருந்த பெல்ட் அவரது கழுத்தை நெறுக்கியது. இதில் கமாரா சுயநினைவை இழந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தார்.
தரையில் விழுந்த அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம். காரணம் அவரது உடம்பில் ஒரு எலும்பு கூட முறியவோ, உடையவோ இல்லாதது தான்.
அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தும் கமாரா எலும்பு முறிவின்றி தப்பித்தது அதிசயம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கமாரா விமானப்படையில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.