தூக்கக் கலக்கத்தில் சக பயணிகள் மேல் “சுச்சூ” போன வாலிபர்- அமெரிக்க விமானத்தில்!
நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆன்கரேஜ் நகரில் இருந்து ஆரெகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் வாலிபர் ஒருவர் முன் சீட்டில் அமர்ந்திருந்த பயணிகள் மீது சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்கரேக் நகரில் இருந்து அந்த ஜெட்புளூ விமானம் புறப்பட்ட நேரத்தில் இருந்து தனது இருக்கையில் அமர்ந்தவாறு தூங்கிக்கொண்டே வந்த ஜெப் ருபின் என்பவர் தரையிறங்குவதற்கு சுமார் 30 நிமிடத்துக்கு முன்னர் தூக்கம் கலைந்து விழித்தார். தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று முன் இருக்கைகளுக்கு நடுவே உள்ள இடைவெளி வழியாக அவர் சிறுநீர் கழித்துள்ளார்.
முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளின் உடைகளும், கைப்பைகளும் ஈரம்பட்டு அசுத்தம் ஆன நிலையில், ஏதும் அறியாதவர்போல் ஜெப் ருபின் தனது இருக்கையில் மீண்டும் படுத்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட பயணிகள் அளித்த புகாரையடுத்து விரைந்துவந்த விமானப் பணியாளர்கள், போர்ட்லேண்ட்டில் விமானம் தரையிறங்கியவுடன் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்குப் பின்னர் சுமார் 5 மணிநேரம் போலீஸ் லாக்அப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெப் ருபின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.