தீவிரவாதியின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்ததால் சுடப்பட்டு பலியான லின்ட் ஃகேப் மேனேஜர்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிணைக் கைதிகளாக இருந்த அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க தீவிரவாதியின் துப்பாக்கியைப் பறிக்க போராடிய நிலையில் லின்ட் ஃகேப் ஹோட்டல் மேனேஜர் டோரி ஜான்சன் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சிட்னியில் லின்ட் ஃகேப் ஹோட்டலுக்குள் நேற்று நுழைந்த தீவிரவாதி ஹாரன் மோனிஸ், 17 பொதுமக்களைப் பிணைக் கைதியாக பிடித்தான். அவனிடம் இருந்து 5 பேர் பாதுகாப்பாக தப்பினர்.
மற்றவர்களைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா போலீசார் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2 மணிக்கு அதிரடித் தாக்குதலை நடத்தி ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அப்போது தீவிரவாதியுடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
முன்னதாக தீவிரவாதி அசந்து கண் அயரத் தொடங்கிய போது அவனிடம் இருந்து துப்பாக்கியை பறித்து பொதுமக்களைக் காப்பாற்ற லின்ட் ஃகேப் ஹோட்டல் மேனேஜர் டோரி ஜான்சன் முயற்சித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தீவிரவாதி மோனிஸ் டோரி ஜான்சனை சுட அவர் உயிரிழந்தார்.
பொதுமக்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் உயிரிழந்த தங்களது மகனை எண்ணி பெருமைப்படுவதாக டோரி ஜான்சனின் பெற்றோர் கூறியுள்ளனர்.