துபாயில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி: மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா பங்கேற்பு
துபாய்: துபாயில் 14.10.2013 அன்று 7 மணியளவில் கராமா சிவஸ்டார் பவன் வளாகத்தில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
சிவ ஸ்டார் குழும நிறுவனத் தலைவர் லெ.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையேற்ற இந்த விழாவை கவிஞர் காவிரிமைந்தன் தொகுத்து வழங்கினார். அமீரகத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியில் உற்சாகமாய் கலந்து கொண்டனர்.
முனைவர் அஜ்மான் மூர்த்தி மற்றும் குத்தாலம் அஷ்ரப் ஆகியோர் முன்னிலை வகிக்க தமிழ்நாடு மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி புகழ் தமிழ்ப் பேராசிரியரும், முன்னாள் துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் பங்கேற்று ஆற்றிய உரையில் நவரசமும் இருந்தது.
திருவிடச்சேரி எஸ்.எம்.ஃபாஃருக், கவிஞர் கவிமதி, தாய்மண் இலக்கியக் கழகம் பட்டணம் மணி, சங்கமம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கலையன்பன், முத்துப்பேட்டை ஷர்புதீன், ஜெயராமன் ஆனந்தி, ஆதிபழனி, கவிதாயினி நர்கீஸ் பானு, திண்டுக்கல் ஜமால், டாக்டர் அருள்முருகன், தஞ்சாவூரான், குறிஞ்சிதாசன், மன்னார்குடி முத்துக்குமார் முதலான பெருமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தியாகத் திருநாளின் முக்கியத்துவம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் பங்கேற்ற விருந்தினர்கள் எடுத்துரைத்து நல்லதோர் விழாவில் நாமெல்லாம் சந்திக்க இனியதொரு வாய்ப்பளிக்கும் வானலை வளர்தமிழ் தலைவர் லெ.கோவிந்தராஜ் அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தனர். அஜ்மான் முனைவர் மூர்த்தி, குத்தாலம் அஷ்ரப், திருவிடச்சேரி எஸ்.எம்.ஃபாஃருக், பட்டணம் மணி, கலையன்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
டி.ஆர்.பி. ராஜா அவர்களிடம் - துபாய் திருச்சி மார்க்கத்தில் ப்ஃளை துபாய் விமான மார்க்கத்தை துவக்கிட வேண்டுமென்று வாழ்த்திப் பேசிய பெருமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுபோல தமிழர்களுக்கான நலவாரியம் ஒன்றும் விரைவில் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு சிவஸ்டார் குழுமத் தலைவர் கோவிந்தராஜ் பொன்னாடை போர்த்த, அமீரகத் தமிழர் அமைப்பு (அஜ்மான்) சார்பில் அஜ்மான் மூர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.
இளையவர்களின் கரங்களில் இந்தியா வந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக சிறப்புரை ஆற்றிய டி.ஆர்.பி. ராஜா - எளிமையாய், இனிமையாய், எதார்த்தமாய் தனது அரசியல் வாழ்க்கையின் துவக்கம் முதல் விவரித்தது உண்மையில் காண்போரை வியக்க வைத்தது. கருத்து, தெளிவு, சொல்லோட்டம், எளிமை, நகைச்சுவை என்று பல்வேறு சுவைகளையும் தனது சிறப்புரையாக்கி நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தார். குறிப்பாக சிவ ஸ்டார் கோவிந்தராஜ் மற்றும் அஜ்மான் மூர்த்தி ஆகியோரின் பொதுநலப் பணிகளுக்காக அவர்களைப் பெரிதும் பாராட்டினார்.
பேராசிரியர் முனைவர் மன்சூர் அவர்கள் எந்த இடத்தில் எந்த பேச்சு எடுபடுமோ அதை குறையின்றி வழங்கினார் என்றே சொல்ல வேண்டும். நகைச்சுவை சற்றே அதிகம் கலந்திட அரங்கம் அவ்வப்போது சிரிப்பில் குலுங்கியது. நல்லதோர் தமிழ்மகனார் இந்நிகழ்வில் பங்கேற்றது உண்மையில் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியளித்தது.
தமிழ்த்தேர் இதழின் பதிப்பாசிரியர் ஜியாவுத்தீன் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுக்கு வந்தது. வந்திருந்த அனைவருக்கும் தியாகத் திருநாள் விருந்து பரிமாறப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை லெ.கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் ஜியாவுத்தீன், ஜெயராமன் ஆனந்தி, முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.