மீதமான சாப்பாட்டால் வந்த வினை.. இளைஞரின் காதுக்குள் கும்பலாக குடும்பம் நடத்திய கரப்பான்பூச்சிகள்!
Recommended Video
பீஜியிங்: சீனாவில் ஒரு நபரின் காதில் கரப்பான் பூச்சிகள் பல குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள ஹுய்யாங் மாவட்டத்தை சேர்ந்தவர் எல்வி (24). சமீபத்தில் ஒருநாள் இவருக்கு வலது காதில் கடுமையான வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல், சான்ஹி மருத்துவமனைக்கு சென்று தனது பிரச்சினையை கூறினார் எல்வி.
இதையடுத்து எல்வியை பரிசோதனை செய்து பார்த்த காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவரது காதில் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும், அதன் 10 குட்டிகளும் இருப்பதை கண்டுபிடித்தனர். காதிற்குள் சுற்றித்திரிந்த கரப்பான்களை ஒவ்வொன்றாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, "எல்வி தான் சாப்பிடும் உணவின் மிச்சத்தை, படுக்கைக்கு அருகிலேயே வைத்துவிடுவாராம். பின்னர் அவர் தூங்கும் போது கரப்பான் பூச்சி அவரது காதில் நுழைந்துவிட்டது. தற்போது அவரது காதில் இருந்த அனைத்து கரப்பான்களையும் வெளியே எடுத்துவிட்டோம்", என தெரிவித்துள்ளனர்.
சாப்பிடும் பொருட்களை படுக்கைக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது, மீதம் வைக்கக் கூடாது என்பது தான் எல்வி மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.