ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால் ஆண்மை அவுட்!
பீஜிங்: வடமேற்கு சீனப் பகுதியில் பல ஆயிரம் மக்களிடம் புருசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது ஆண்களிடம் மலட்டுத் தன்மையை உருவாக்கி விடும் ஆபத்து கொண்ட பாக்டீரியா என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அடுத்ததாக அதே சீனாவிலிருந்து மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வட மேற்கு சீனாவின் கன்சு மாகாண தலைநகரான லான்ஷோவின், சுகாதார ஆணையம் இதை உறுதி செய்துள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கு பாஸ்.. சீனா அசத்தல் தகவல்
மலட்டுத்தன்மை
இதுவரை 3,245 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் மிகவும் தீவிரத் தன்மை கொண்டது. வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆண்களை மலட்டுத்தன்மையடையச் செய்யக் கூடும் என்று எச்சரிக்கிறது ஆய்வு முடிவுகள்.
வாழ்நாள் பாதிப்பு
அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுபற்றி கூறுகையில், இந்த நோயை மால்டா காய்ச்சல் என்றும் அழைக்கலாம். இந்த நோய் பாதித்தவர்களுக்கு தலை வலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை இருக்கும். இந்த அறிகுறிகளை சிலருக்கு குணப்படுத்தலாம். சிலருக்கு வாழ்க்கை முழுக்க அதன் பாதிப்பு தொடரக்கூடும். மூட்டு வீக்கம் அல்லது உடல் உறுப்பு வீக்கம் போன்றவற்றை இந்த பாக்டீரியா ஏற்படுத்தும்.
மனிதர்களிடம் பரவாது
அதேநேரம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவுவது மிகவும் அரிதான செயல். சுகாதாரமற்ற அழுகிப்போன உணவுகளை சாப்பிடுவது அல்லது பாக்டீரியாவை சுவாசத்தின் மூலமாக உள்ளே இழுத்துக்கொள்வது உள்ளிட்டவற்றின் மூலம்தான் இந்த நோய் பரவும். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிரியல் லேப்
அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல்படி, இசட் ரெட்வுட் லான்ஷோ உயிரியல் மருந்து நிறுவனத்தில் இருந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த பாக்டீரியா பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் போது காலாவதியான சானிடைசர், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது என்று அந்த செய்தியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நோய் பரவல்
முதலில் சிறிய அளவிலான மக்களுக்குத்தான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் 21,000 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் பாதிப்பின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை இந்த நோயால் யாரும் பலியானதாக தகவல் இல்லை. இது பற்றி சீன நாட்டின் குளோபல் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, எதிர்பார்த்ததைவிட அதிக அளவுக்கான நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த வேகத்தில் நோய் பரவுவது கவலையளிப்பதாக கூறப்பட்டுள்ளது.