3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..!
பியூனோ ஏர்ஸ்: கால்பந்தாட்ட உலகில் சக்ரவர்த்தியாக திகழ்ந்த மாரடோனாவின் மறைவு அவரது ரசிகர் பெருமக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிகவும் எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த மாரடோனா, தனது அபார ஆற்றலால் உலகம் போற்றும் உன்னத வீரராக உச்சத்தை அடைந்தார்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் தனது இறுதிமூச்சு வரை கால்பந்தாட்டத்தை உயிர் மூச்சாக சுவாசித்தவர் டீகோ மாரடோனா.
ஏழை குடும்பம்
அர்ஜெண்டினா நாட்டின் தலைநகரான பியூனோ ஏர்ஸ் அருகே உள்ள வில்லா ஃபியோரிடா என்ற சிற்றூரை பூர்வீகமாக கொண்டவர் மாரடோனா. வீட்டில் 4-வது பிள்ளையாக பிறந்த அவர் தனது இளம் வயதை வறுமையில் தான் கழித்தார். மாரடோனாவுக்கு 3 வயது இருக்கும் போது அவரது இல்லத்திற்கு சென்ற உறவினர் ஒருவர் கால்பந்து ஒன்றை மாரடோனாவுக்கு பரிசாக கொடுத்துச் சென்றார்.
ஜூனியர்ஸ் டீம்
விவரம் தெரியாத அந்த 3 வயதில் பந்தை எட்டி உதைக்கத் தொடங்கிய மாரடோனா பின்னாட்களில் அந்த விளையாட்டு தான் தனது எதிர்காலம் என தீர்மானித்தார். கால்பந்தாட்டம் மீது வெறிகொண்டு களமாடத் தொடங்கினார். தனது எட்டாவது வயதில் அர்ஜெண்டினார் ஜூனியர்ஸ் கால்பந்தாட்ட குழுவில் இடம்பெற்று விளையாடினார். கால்பந்து விளையாட்டு மீதிருந்த பற்றும் வெறியும் மாரடோனாவை தனிப்பெரும் வீரராக உலகிற்கு அடையாளம் காட்டியது.
உலகக்கோப்பை
அந்தவகையில் 1986-ம் ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக செயல்பட்டு உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்து தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்தார். மைதானத்தில் பந்தை உருட்டிக்கொண்டு செல்வதில் மாரடோனாவின் கால்கள் நாட்டியமாடும் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மிக லாவகமாக விளையாண்டு கோல்களை ஈட்டிக்கொடுப்பார்.
இளைய தலைமுறை
கால்பந்து விளையாட்டு மூலம் எப்படி சிகரத்தை அடைந்தாரோ அதேபோல் அந்த விளையாட்டு மூலம் இவர் சிக்காத சர்ச்சைகளே இருந்திருக்க முடியாது. மனநல பிரச்சனை, ஊக்க மருந்து பயன்பாடு, செய்தியாளரை நோக்கி ஏர் கன்னில் சுட்டது, என இவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் சுழன்றடித்தன. இருப்பினும் அவை அனைத்தையும் கடந்து பல இளைய தலைமுறையினருக்கு கால்பந்தாட்டத்தின் சூட்சுமங்களை இறுதிகாலம் வரை கற்றுக்கொடுத்து வந்தார்.
கவுரவிப்பு
மாரடோனாவை நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்து மிக உயர்ந்த கவுரவத்தை கடந்த 2000-ம் ஆண்டு வழங்கியது ஃபிஃபா அமைப்பு. இவர் அர்ஜெண்டினா அணிக்கு மட்டும் விளையாடாமல் நபோலி, பார்சிலோனா அணிகளுக்காகவும் களமாடியிருக்கிறார். குறிப்பிட்ட நாடு என்றில்லாமல் உலகம் முழுவதும் மாரடோனாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் நாகலாந்தில் மாரடோனா பேன்ஸ் கிளப்களே உள்ளன.
தலைவர்கள் இரங்கல்
இப்படி எண்ணற்ற பெருமைகளை உடைய மாரடோனா மறைவுக்கு அர்ஜெண்டினா நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அல்பெர்டோ பெர்ணாண்டஸ் அறிவித்துள்ளார். இதனிடையே உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மாரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.