கடல் வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழியுமா.. திமிங்கலத்தை வைத்து ஓர் ஆய்வு
கடல் வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழியும் வாய்ப்பிருக்கிறதா என்று திமிங்கலத்தை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லண்டன்: விலங்குகள், கடல் வாழ் உயிரினங்களை மனிதர்கள் வேட்டையாடுவதால் சில தாக்கங்கள் அந்த உயிரினத்திற்கு ஏற்படுகிறது. அதே போன்று தொடர்ந்து வேட்டையாடப்படுவதால் திமிங்கல இனங்களின் சராசரி உடல் அளவு குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதுகுறித்த அறிகுறிகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே தெரிய வந்துள்ளதாக ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறுகிறது.
இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமம் என்ற இதழில் வெளியான கட்டுரை கடல் வாழ் உயிரினங்கள் பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆவணங்கள் ஆய்வு
சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இருவர் இது குறித்த ஆய்வை மேற்கொண்டார். கிறிஸ்டோபர் கிளெமெண்ட்ஸ் என்பவரும் அவரது நண்பரும் சேர்ந்து 1900 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் வணிக நோக்கத்தோடு பிடிக்கப்பட்ட திமிங்கலங்களின் உடல் அளவுகள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
திமிங்கலம் பிடிக்கத் தடை
ஏன் அவர்கள் 1985ம் ஆண்டு வரையிலான ஆவணங்களை ஆய்வு செய்தார்கள்? அந்த ஆண்டோடுதான் உலக அளவில் திமிங்கலங்களை வேட்டையாடுவதற்கு தடை கொண்டு வரப்பட்டது.
அளவு குறைவு
அந்த ஆய்வில், நீல நிற திமிங்கலம் ஸ்பெர்ம் வகை திமிங்கலம் உள்ளிட்ட பல்வேறு வகையான திமிங்கலங்கள் பற்றிய ஆவணங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் திமிங்கலத்தின் உடல் அளவுகள் குறைந்துள்ளது கண்பிடிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
1905ம் ஆண்டு பிடிக்கப்பட்ட ஸ்பெர்ம் வகை திமிங்கலத்தைவிட 1980ம் ஆண்டு பிடிக்கப்பட்ட அதே வகை திமிங்கலத்தின் உடல் அளவு வெகுவாக குறைந்துள்ளது என்கிறார் ஆய்வாளர் கிளெமெண்ட்ஸ். பெரிய அளவிலான உயிரினங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்படுவதால்தான் உடல் அளவு குறைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் வாழ் உயிரினம் அழியும்?
இதே போன்றுதான் பெரிய அளவில் இருக்கும் கடல்வாழ் மீன்களை பிடிப்பதாலும் அதன் அளவுகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. திமிங்கலம் மற்றும் பெரிய அளவிலான மீன்களை வேட்டையாடுவதால் அதன் அளவு குறைவது போன்று, நாளடைவில் கடல்வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடுமா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.