என்னுடைய தகவல்களேயே ஆட்டயப் போட்டுட்டாங்கய்யா... பேஸ்புக் ஜூக்கர்பர்க் பகிரங்க ஒப்புதல்
பேஸ்புக்கில் என்னுடைய தகவல்களே திருடப்பட்டுள்ளன என, அதன் உரிமையாளரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்,
வாஷிங்டன்: பேஸ்புக்கில் என்னுடைய தகவல்களே திருடப்பட்டுள்ளன என, அதன் உரிமையாளரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்,
பேஸ்புக் சமூகதளத்தை உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தற்போது அதிபராக உள்ள டொனால்டு டிரம்புக்கு தேர்தல் பணிகளை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற பிரிட்டன் நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிறுவனம், பேஸ்புக்கில் உள்ள தகவல்களை திருடி, தேர்தலுக்கு பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலும், பேஸ்புக் பயனாளிகளின் ரகசிய, தனிப்பட்ட தகவல்கள் அத்துமீறி பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. பேஸ்புக்கில் உள்ள பயனாளிகளின் தனிப்பட்ட ரகசியங்கள் திருடப்பட்டதை பேஸ்புக் நிறுவனரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக் கொண்டார்.
இதுபோன்ற திருட்டு நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். பேஸ்புக் பயன்படுத்துவோர் இடையே இந்த தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், பேஸ்புக் தகவல் திருட்டு தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்ட் எம்பிக்கள் குழு விசாரித்து வருகிறது. ஜூக்கர்பெர்க்கிடம் நேற்று விசாரணை துவங்கியது. இன்றும் விசாரணை நடந்தது. மொத்தம் 8.7 கோடி தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்றைய விசாரணையின்போது, அந்த 8.7 கோடி பேர்களில் நானும் ஒருவன். என்னுடைய தகவல்களே திருடப்பட்டுள்ளன என்று ஜூக்கர்பெரக் கூறியுள்ளார். இது அமெரிக்க எம்பிக்களை அதிர்ச்சி அடைய செய்ய உள்ளது.
இதனிடையில், சமூகதளங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.