நாம் பேஸ்புக்கில் பொழுதைக் கழிக்கிறோம்.. மார்க் உலகின் 3வது பெரும் பணக்காரராக மாறி நிற்கிறார்!
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய 3 வது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.
பேஸ்புக்கின் இணை நிறுவனர் மார்க். இவரது புண்ணியத்தால் இன்று பலரும் உட்கார்ந்த இடத்திலையே உலகை வலம் வருகின்றனர். உலக விஷயங்களை வறுத்தெடுத்துக் கொண்டுள்ளனர்.
பேஸ்புக் இன்றி அமையாது உலகு என்ற புது மொழியைப் படைத்துள்ளது மார்க்கின் பேஸ்புக். இன்று மார்க் புதிய உயர்வைக் கண்டுள்ளார். உலக அளவில் 3வது மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையை அவர் எட்டியுள்ளார். வாரன் பப்பட்டை ஓவர் டேக் செய்து 3வது இடத்தைப் பிடித்துள்ளார் மார்க்.
அமேசான் முன்னணி
அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெஸாஸ் தொடர்ந்து போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவரது சொத்து, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஆகும்.
நம்பர் டூ கேட்ஸ்
மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு 6 லட்சத்து 18 ஆயிரம் கோடி ஆகும். 3வது இடத்தில் இதுவரை வாரன் பபெட் இருந்து வந்தார். தற்போது அவரை விட 2.4 சதவீத அதிக சொத்து மதிப்புடன் மார்க் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மார்க் சொத்து
மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ரூ. 5.61 லட்சம் கோடியாகும். இது வாரன் பபெட்டை விட 2565 கோடி கூடுதலாகும். வாரனுக்கு 87 வயதாகிறது. மார்க்குக்கு ஜஸ்ட் 34தான்!.
பங்கு மதிப்பு உயர்ந்ததால்
பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் மார்க்கின் சொத்து மதிப்பும் வெகு வேகமாக உயர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய பங்கு வர்த்தக முடிவில் பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ. 13,975 ஆக இருந்தது.