அமெரிக்க போலீசே அனுமதிக்குது... தமிழக போலீஸுக்கு என்ன வந்தது? - மார்க்கண்டேய கட்ஜு காட்டம்!
டல்லாஸ்(யு.எஸ்): தமிழகப் பிரச்சனைகளுக்கு ஆதரவான போராட்டத்திற்கு அமெரிக்க போலீஸ் அனுமதி கொடுக்கும் போது, தமிழக போலீஸ் எப்படி அனுமதி மறுக்கலாம் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 'கட்ஜூவுடன் ஒரு மதிய வேளை' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற மார்க்கண்டேய கட்ஜூ இந்தியாவில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினார்.
தமிழக விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி பேசும் போது, விவசாயிகளின் குறைகளை முழுமையாக ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சக விவசாயிகளின் மண்டை ஓட்டுகளுடன், தலைநகரில் விவசாயிகள் போராடவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
தொழிலதிபர்களோ, எஞ்ஜினியர்களோ உணவைத் தயாரிப்பதில்லை. அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் குறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணவேண்டும்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் வேண்டவே வேண்டாம்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடவே கூடாது என்று வலியுறுத்தினார். இந்த திட்டங்களுக்காக உபயோகிக்கப்படும் தொழில் நுட்பங்கள் மனித வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை.
பூகம்பம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு, நோய்கள் பெருக்கம் என மக்கள் நலனுக்கு எதிரான தொழில் நுட்பங்களை, மக்கள் வசிக்கும் இடங்களில் பயன்படுத்தலாமா? தொழில் நுட்பங்கள் மக்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். கேடு விளைவிக்கக் கூடாது.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. டெக்சாஸ் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மக்கள் வசிக்காத இடங்களில்தான் இத்தகைய திட்டங்கள் உள்ளன.
தமிழகத்தில் மக்கள் வசிக்கும் இடங்களில், அவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கக் கூடாது," என்று கூறினார்.
தமிழக போலீஸுக்கு அதிகாரம் இல்லை
மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில், விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும்
இளைஞர்களுக்கு தடை விதித்த தமிழக போலீஸுக்கு கண்டனம் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் படி அமைதி வழியில் போராடும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உண்டு.
அதைப் பறிக்கும் அதிகாரம் காவல் துறைக்கு கிடையாது. அமெரிக்காவில், இங்கே டல்லாஸ் நகரில் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தி இருக்கிறார்கள்.
அமெரிக்க காவல்துறை அந்த பேரணிக்கு பாதுகாப்பு வழங்கி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நெறிப்படுத்தி உதவி செய்துள்ளார்கள்.
ஆனால் தமிழக விவசாயிகளுக்காக போராடும் இளைஞர்களை, தமிழகத்தில், தமிழக காவல் துறையே தடை செய்கிறது. தமிழகத்தின் மீது அமெரிக்க போலீஸுக்கு இருக்கும் அக்கறை கூட இவர்களுக்கு இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.
தடையை நீக்கக் கோரி சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் இளைஞர்கள்
முறையிட்டுள்ளனர், அவர் சென்னைக்கு வெளியே எங்கு வேண்டுமானாலும் போராட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறியதாக, #SaveTamiNaduFarmer குழுவின் ஒருங்கிணைப்பாளர் கவிதா பாண்டியன் தெரிவித்தார்.
இதையடுத்து போராட்ட இளைஞர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் அவசர வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-இர தினகர்