செவ்வாய் கிரகத்தில் 2000வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்தது நாசாவின் க்யூரியாசிட்டி!
நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாயில் தனது 2000வது நாளை நிறைவு செய்துள்ளது.
நியூயார்க்: நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தனது இரண்டாயிரவது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்த க்யூரியாசிட்டி என்ற விண்கலத்தை கடந்த 2012ம் ஆண்டு விண்ணில் அனுப்பியது. பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம், ஆகஸ்டு மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட இந்த விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தனது 2000வது நாளை நிறைவு செய்துள்ளது க்யூரியாசிட்டி. செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்கள் மற்றும் 35 விநாடிகளுக்குச் சமம் ஆகும். எனவே, இந்தக் கணக்கின்படி செவ்வாய் கிரகத்தில் க்யூரியாசிட்டி தரை இறங்கி 2,055 நாட்கள் ஆகின்றன.
கடந்த 2013ம் ஆண்டு க்யூரியாசிட்டி நடத்திய ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தின் மண்ணில் 2 சதவீதம் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு குளோரின், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு இருப்பதும் க்யூரியாசிட்டி அனுப்பிய தகவல்கள் மூலம் தெரிய வந்தது நினைவு கூரத்தக்கது.
கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி செலவில் இந்த விண்கலத் திட்டத்தை நாஸா செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா தவிர 12 நாடுகளும் நிதியுதவி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.