துபாயில் 17,000 பேருடன் யோகா செய்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்
துபாய்: துபாயில் இந்திய துணைத் தூதரகம் சார்பில் நடந்த சர்வதேச யோகா தினம் கொண்டாட்டத்தில் 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர். நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது. துபாயில் இந்திய துணைத் தூதரகம் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
துபாயில் உள்ள அல் வாசல் கால்பந்து கிளப்பில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பல நாடுகளைச் சோ்ந்த மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி துவங்கும் முன்பு வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன
யோகாசன நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதரக அதிகாரி அனுராக் பூஷன் பங்கேற்றார். நிகழ்ச்சி பற்றி அவர் கூறுகையில்,
இது யோகா தினம் போல தெரியவில்லை. யோகா திருவிழாபோல தெரிகிறது. உடல், மனம், ஆன்மா ஒன்றிணைவது தான் யோகா. இந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 17 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர் என்றார்.
யோகா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமீரக கராத்தே மற்றும் டேக்வாண்டோ பேரவையின் தலைவரும், அமீரக தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினருமான நாசர் அல் சயீத் அப்துல் ரசாக்அல் ரசூக்கி, இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர்கள் ஏ.ஜி.மோகன், நித்திய பிரகாஷ், கே.பி.மாதவன் மற்றும் மரியம் ஓவேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.