மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி.. ஐநா அறிவிப்பு.. இந்தியாவுக்கு வெற்றி!
நியூயார்க்: இந்தியாவின் நீண்ட போராட்டத்தை அடுத்து, மும்பை தாக்குதல் குற்றவாளி மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என ஐநா சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவர் தான் இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை நடந்ததற்கு முக்கிய காரணம் ஆவார்.
மசூத் அசார் பாகிஸ்தானில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் மற்றும் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற மூளைச்சலவை செய்து தீவிரவாத சம்பவங்களை நடத்தி வருகிறார்.
ஒகேனக்கல் காட்டுக்குள் சென்ற இருவர்.. ஆணை சுட்டுக்கொன்று சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்
பாகிஸ்தான் மறுப்பு
இதனால் மசூத்அசாருக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனால் இதுவரை பாகிஸ்தான் அவர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகிறது. இதனால் மசூத்அசார் வழக்கம் போல் சுதந்திரமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறார்.
தடுத்த சீனா
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும்படி ஐநா சபையில் போராடியது. பல ஆண்டுகளாக நடத்திய இந்த போராட்டத்தை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ஐநா சபையில் தடுத்தது.
சம்மதித்த சீனாவை
இதனிடையே தற்போது புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. முதலில் இதற்கு முட்டுக்கட்டை போட்ட சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்தன.
ஐநா அறிவிப்பு
மசூத்அசாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிற வாசகங்களில் சில மாற்றங்களை செய்தால், சம்மதிக்கிறோம் என சீனா முன்வந்தது. இதையடுத்து ஐநா சபையில் சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்த தகவலை இந்தியாவிற்கான ஐநா தூதர் சையத் அக்பரூதின் தெரிவித்துள்ளார்.
சசிதரூர் மகிழ்ச்சி
இதனிடையே 10 ஆண்டுகளாக மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா போராடியாகவும், தற்போது அவர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சசிதரூர் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.