இந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு
அங்காரா: டெல்லியில் வகுப்புவாத வன்முறைகளால் 38 பேர் பலியாகி உள்ள நிலையில், இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக "படுகொலைகள்" நிகழ்ந்திருக்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையாக பழி சுமத்தி உள்ளார்..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை கடந்த ஆண்டு இறுதியில் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக டிசம்பர் மாதம் முதல் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியாவை இந்து நாடாக பிரதமர் மோடி மாற்ற விரும்புகிறார் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லிம்களில் பலர் குடியுரிமைச் சட்டத்தை அஞ்சுகிறார்கள் - ஒரு குடிமக்களின் பதிவேடுடன் இணைந்து - அவர்கள் நிலையற்றவர்களாக அல்லது தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள். எனினும் குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் ஒருவரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய உறுதி அளித்துள்ளது. என்ஆர்சி குறித்து திட்டமே இல்லை என்று பிரதமர் மோடியே கூறியுள்ளார்.
இருதரப்பு மோதல்
எனினும் போராட்டங்கள் குறையவில்லை. அதிகரித்தே வருகிறது. வடகிழக்கு டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்திற்கு சிஏஏ ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே கடந்த 3 நாட்களாக நடந்த மோதல் இருதரப்பு மோதலாக மாறியது. பின்னர் மிகப்பெரிய அளவில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் சுமார் 38 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். பல இடங்களில் பொதுமக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பலர் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் இரு சமூகத்தினரும் உள்ளார்கள்.
மோசமாக பாதிப்பு
இந்நிலையில் முஸ்லீம் சமூகத்தினர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர் குற்றம்சாட்டி உள்ளார். இஸ்லாம் மதம் மற்றும் நம்பிக்கைகள், மற்றும் மக்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட எர்டோகன் காஷ்மீர் குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் எதிராகவே முடிவு எடுத்தார். அதேபோல் பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக உள்ளார்.
எர்டோகன் விமர்சனம்
இந்நிலையில் துருக்கி தலை நகர் அங்காராவில் அந்நாட்டு அதிபர் எர்டோகன் இந்தியாவில் நடந்த வகுப்பு வாத வன்முறை குறித்து பேசுகையில், "இந்தியா இப்போது படுகொலைகள் பரவலாக இருக்கும் ஒரு நாடாக மாறியுள்ளது. என்ன படுகொலைகள்? முஸ்லிம்கள் படுகொலைகள். யாரால்? இந்துக்களால்.
அமைதி சாத்தியமில்லை
தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முஸ்லிம் குழந்தைகளை இரும்பு கம்பிகளை கொண்டு கும்பல்கள் தாக்குகின்றன. இந்த மக்கள் உலகளாவிய அமைதியை எவ்வாறு சாத்தியமாக்குவார்கள். அது சாத்தியமற்றது. அவர்கள் அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் என்பதால் - அவர்கள் 'நாங்கள் பலமாக இருக்கிறோம்' என்று கூறுகிறார்கள், ஆனால் அது வலிமை அல்ல" என்று கடுமையாக பேசி உள்ளார்.