நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்...6.6 ரிக்டராக பதிவு
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் அந்த நாட்டை உலுக்கிய நிலையில் அடுத்தடுத்து ஆஃப்டர்ஷாக் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
நேற்ற்று நேபாளத்தில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ரிக்டருக்கும் அதிகமான அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நேபாளம் மட்டுமல்லாமல், இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகள், டெல்லி பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நேபாளம் மிகப் பெரிய அழிவைச் சந்தித்துள்ளது. பல பாரம்பரியமான, புராதன, பழமையான கட்டடங்கள் இடிந்து போய் விட்டன. 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளுர் நேரப்படி காலை 6 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. அடுத்த 72 மணி நேரத்தில் அவ்வப்போது இதுபோன்ற ஆஃப்டர்ஷாக் நில அதிர்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீட்புப் பணிகளும், இடிபாடுகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து முழுவீச்சில் நடந்து வருகின்றன.