சிலியில் பற்றி எரியும் காட்டுத் தீ.. 10 லட்சம் ஏக்கர் காடுகள் நாசம்.. 11 பேர் பலி
சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து நாசமாகின.
சிலி நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட காட்டு தீயில் பல லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக எரிந்து வரும் தீயை அணைக்க அந்நாட்டு அரசு எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்குப் பயன் அளிக்கவில்லை. இதையடுத்து, பிரான்ஸ், அமெரிக்கா, பெரு உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.
காடுகள் மற்றும் அருகில் உள்ள நகரப்பகுதிகளில் பற்றி எரியும் தீயை அணைக்க இந்நாடுகளின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பல இடங்களில் சிலர் வேண்டுமென்றே தீ வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவல்கள் உண்மையென்றால், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் மிஷல் பேச்சல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காட்டு தீயில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலானது.
இந்நிலையில், காட்டுப் பகுதி ஒன்றில் தீ வைத்ததாக இளம் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இளம் பெண் மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது.