இலங்கைக்கு இன்னொரு மூக்குடைப்பு.. மொரீஷியஸ் பிரதமரும் புறக்கணிப்பு
ஏற்கனவே கனடா பிரதமர், இந்தியப் பிரதமர் ஆகியோர் இந்த மாநாட்டுக்குப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ள நிலையில் தற்போது மொரீஷியஸ் பிரதமரும் மாநாட்டுக்குப் போவதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமாக இருப்பதால் தான் மாநாட்டுக்குப் போக விரும்பவில்லை என்று மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராம்கூலம் மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் பேசுகையில், இலங்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைக்குப் போவது சரியாக இருக்காது என்பதால் நான் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் எல்லாவற்றையும் விட மனித உரிமைகள்தான் முக்கியம். எனவே இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க விரும்பவில்லை என்றார்.
இருப்பினும் மொரீஷியஸ் சார்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆர்வின் பூலெல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரீஷியஸ் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொரீஷியஸ் நாடு1968ம் ஆண்டு சுதந்திரமடைந்தது. அதன் பின்னர் காமன்வெல்த் மாநாடு ஒன்றை அதன் பிரதமர் புறக்கணிப்பது இதுவே முதல் முறையாகும்.
அடுத்த காமன்வெல்த் மாநாட்டை 2015ம் ஆண்டு மொரீஷியஸ்தான் நடத்தவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.