ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பக்தாதிக்கு பின்னர் தலைவராக இருக்கும் அந்த 9 பேர்
பாக்தாத்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டுவிட்டதாக அவ்வப்போது தகவல்கள் வரும் நிலையில் அந்த இயக்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ள 9 பேர் விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஐ.எஸ்.தீவிரவாதிகள் இயக்கத் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி ஈராக்கில் வான்வழித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டதாக மீண்டும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக் வான்படை நடத்திய தாக்குதலில் பக்தாதியும் அவருடன் சென்ற 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால் கொல்லப்பட்டது பக்தாதிதானா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அத்துடன் பக்தாதி என்ற நபர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது கொல்லப்பட்டுவிட்டாரா? என்ற சந்தேகம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கிறது.
அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், தலிபான் தலைவர் ஒமர் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதான் ஓங்கியுள்ளது. இந்த இயக்கத்திலும் பக்தாதிக்குப் பின்னர் தலைமைப் பொறுப்புக்கு பல்வேறு பெயர்கள் அடிபடுகின்றன.
2004ஆம் ஆண்டு அல்கொய்தா இயக்கத்தில் 51 வயது அப்துல்லா அலானி இணைந்தார். பின்னர் பக்தாதியுடன் சேர்ந்து ஐ.எஸ். இயக்கத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். அவர்தான் பக்தாதிக்கு பின்னரான ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் அபு ஆலா அல் அப்ரி என்ற ஆசிரியர் பெயரும் அடிபடுகிறது. ஆனால் ஈராக் ராணுவமோ அப்ரி கொல்லப்பட்டுவதாக கூறி வருகிறது. இவர் குறித்த ஊர்ஜிதமான எந்த ஒரு தகவலும் இல்லை.
இவர்களைத் தொடர்ந்து சேக் யூனுஸ் அல் மஷாதானி, அபு அலி அல் அன்பாரி, அப்துல் ரஹ்மான் அல் தலபானி, அபு அதீர் அல் அப்சி, நிமா அப்த் நைய்ப் அல் ஜூபைரி, அபு பக்கர் அல் கடூனி, அபு ஒமர் அல் ஷிஷானி என பலரது பெயரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத் தலைவராகலாம் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.
இருப்பினும் பக்தாதி உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற தகவல் முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.