ஆல்ப்ஸ் மலையில் தவித்த சுற்றுலா பயணி..பாதுகாப்பாக விடுதிக்கு அழைத்து வந்த பூனை !
ஜெனிவா: சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த ஹங்கேரி நாட்டு சுற்றுலா பயணியை, பூனை ஒன்று வழிகாட்டி பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே உயரமான பனிச்சிகரங்களை கொண்ட உயரமான மலை ஆல்ப்ஸ் மலையாகும். இங்கு பயணித்த ஹங்கேரி சுற்றுலா பயணி ஒருவர் தனக்கு கிடைத்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், ஜிம்ம்ல்வேல்டு கிராமத்திற்கு அருகே உள்ள மலையில் பயணித்தேன். பின்னர், அங்கிருந்து கீழே இறங்கும் வழியை மறந்துவிட்டேன். விடுதிக்கு செல்லும் வழியை வரைப்படத்தில் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மலையில் இருந்து கீழே இறங்கும் அதிகாரப்பூர்வ வழி பனியால் மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வெள்ளை மற்றும் கருப்பு நிறத்துடன் இருந்த பூனை ஒன்று நான் தவித்துக்கொண்டிருந்ததை பார்த்தது. பின்னர் ஒரு பாதையில் என்னை வழிநடத்தி சென்றது. பின்னால், நான் வருகிறேனா என பார்த்துக்கெண்டே பயணித்தது அந்த பூனை. இறுதியில் என்னை பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு வந்து சேர்த்தது என கூறியுள்ளார்.
தற்போது, சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிட்டுள்ள அவரின் கதை மற்றும் பூனையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும், கடந்த 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட அதே பூனையின் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த பூனை அந்த விடுதிக்கு அருகில் உள்ள ஒரு தம்பதியரின் வளர்ப்பு பூனையாகும். அது சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைக்கு செல்லும் போது இதுவும் அவ்வப்போது உடன் பயணிக்குமாம்.