ரியாத்தில் ஹஜ் பயணிகளுக்காக நடந்த மாபெரும் ரத்ததான முகாம்
ரியாத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - ரியாத் மண்டலமும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியும் இணைந்து மாபொரும் ரத்த தான முகாம் ஒன்றை கடந்த 11.09.2015 அன்று நடத்தின. இந்த முகாமில் 326 பேர் ரத்ததானம் செய்தார்கள்.
ரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடனுன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராக பிராமாண்ட ரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தத்தை கொடையாக வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC)மருத்துவமனை இணைந்து நடத்திய 37வது மாபெரும் ரத்த தான முகாம் கடந்த 11-09-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாம் காலை 8.00 மணிக்கு துவங்கியது. விடுமுறை நாட்களையும் பொருட்படுத்தாமல் மக்கள் சாரை சாரையாக மருத்துவமனையில் குவிந்தார்கள். மருத்துவ ஊழியர்களின் சிரமத்தை குறைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் ரத்த தான விருப்ப படிவத்தை நிரப்பி வழங்கினர்.
இந்த முகாமில் 410 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி அடிப்படையில் 326 பேர் ரத்த கொடை அளித்தனர். இதில் தமிழ் பேசுபவர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் கணிசமாக கலந்து கொண்டார்கள்.
மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் திரு. சவுத் அல் அனாசி முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனித நேய பணியை பாராட்டி தனது வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்து கொண்டார். மேலும், அவர் நிர்வாகிகளிடத்தில் பேசும் போது, இதுவரை இந்த மருத்துவமனையில் இந்த அளவுக்கு ரத்த தான முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - ரியாத் மண்டலத்தை தவிர வேறு எந்த அமைப்புகளும் நடத்தியதில்லை என்று தொரிவித்தார்.
ரியாத் மண்டல ரத்த தான ஒருங்கினைப்பாளர் ஹாஜா மைதீன் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 36 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் நமது இந்த மனித நேய பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது என்றார்.
ரியாத் மண்டலத்தின் தலைவர் இர்ஷாத் அஹ்மது அவர்கள் ரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி கூறும் போது திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம்" யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்" என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதை களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த பணியை செய்து வருவதாக கூறினார். கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - ரியாத் மண்டலம் வளைகுடா மண்டலங்களில் தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், இதை பாராட்டி பல்வேறு விருதுகளை மருத்துவமனைகள் வழங்கியுள்ளன என்றார்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.