வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உதவும் மெல்போர்ன் தமிழ் அமைப்புகள்
மெல்போர்ன்: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மக்களுக்கு மெல்போர்ன் வாழ் தமிழர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருவதுடன் மறுசீரமைப்பு பணிகளையும் செய்து வருகிறார்கள்.
அண்மையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் செயல்படும் தமிழர் என்ற அமைப்பு கடலூர் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது.
தமிழ் அமைப்புகள் சார்பில் மெல்போர்னில் வசிக்கும் தமிழ் மக்களிடம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. (https://m.facebook.com/Chennai-Flood-Relief-Campaign-Melbourne-Tamil-Communities-1720954651466954/)
தற்போது கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை மெல்போர்ன் தமிழ் அமைப்புகள் அனுப்பி வைத்து வருகின்றன. இது தொடர்பாக மெல்போர்ன், தமிழ்நாடு மற்றும் பெங்களூரில் பல்வேறு குழுக்களுடன் தமிழர் அமைப்பின் செயலாளர் பிரின்ஸ் கென்னட் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
முதலில் ஆலப்பாக்கம், சிவன்கோவில் உள்ளிட்ட இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. அடுத்தபடியாக பெங்களூரில் இருந்து தமிழர் அமைப்பு மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பொருட்கள் விளாத்தூர், சிந்தாமணிக்குப்பம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
பல்வேறு கிராம மக்கள் தங்களுக்கு அரிசி தேவைப்படுவதாக தமிழர் அமைப்பிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்க அரிசிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தமிழர் அமைப்பு கடலூரில் மறுசீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தாராளமாக கொடை அளித்த மெல்போர்ன் வாழ் தமிழர்களுக்கும், கடலூரில் களத்தில் இறங்கி பணியாற்றும் குழுவுக்கும் தமிழர் அமைப்பு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.