மெக்சிகோ பெண் ஆளுநர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. பதவியேற்ற 10வது நாளில் துயரம்!
பியூப்லா, மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் பெண் ஆளுநர் மார்த்தா எரிக்கா அலோன்சா ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியுள்ளார். பதவியேற்ற 10வது நாளில் இந்த துயர முடிவை அவர் சந்தித்துள்ளார்.
பியூப்லா மாகாணத்தின் ஆளுநராக கடந்த டிசம்பர் 14ம் தேதிதான் எரிக்கா பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் அவரும் அவரது கணவரும் ஹெலிகாப்டரில் பயணித்தபோது அது கீழே விழுந்து நொறுங்கி எரிந்து சாம்பலானது. இதில் எரிக்காவும், அவரது கணவர் ரபேல் மொரினோ வல்லேவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
45 வயதான எரிக்காவின் திடீர் மரணம் மெக்சிகோவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஆளுநர் தேர்தலில் மிகக் கடுமையான போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்று ஆளுநரானவர் எரிக்கா. பான் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவரது மரணம் குறித்து மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது விபத்தா அல்லது சதியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு அதிபர் ஆண்டிரஸ் உத்தரவிட்டுள்ளார். பியூப்லா நகருக்கு அருகே இந்த விபத்து நடந்தது. விபத்தில் பைலட் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
எரிக்காவின் கணவரும் முன்னாள் ஆளுநர்தான். இதே மாகாண ஆளுநராக 2011- 2017 காலத்தில் பதவி வகித்துள்ளார். தற்போது இவர் எம்.பியாக இருந்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக மனைவியுடன் சேர்ந்து அவரும் உயிரிழந்துள்ளார்.
மெக்சிகோவில் முக்கியப் பிரபலங்கள் பலரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து வருவது அந்த நாட்டு மக்களை அதிர வைத்துள்ளது. முன்பு 2011ல் இப்படித்தான் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பிளேக் மோரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு அமைச்சரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே மக்கள் கூட்டத்தில் விழுந்து 13 பேர் பலியானார்கள்.