மெக்சிகோவை உருக்குலைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கி விழுந்த கட்டிடங்கள் அதிர வைக்கும் வீடியோ
மெக்சிகோ நாட்டில் மிகசந்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ நாட்டை அதிர வைத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அங்குள்ள கட்டிடங்களை தரைமட்டமாக்கிய வீடியோக்கள் சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மிரட்சியை ஏற்படுத்தும் அந்தக் காட்சிகள் உருக்குலைந்துள்ள மெக்சிகோவின் நிலையை பிரதிபலிக்கின்றன.
மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.
திடீரென ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பேரழிவில் சிக்கி இது வரை 248 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் நிலநடுக்கத்திற்கு தாங்காமல் நொறுங்கி விழும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.
|
சரிந்து விழுந்த கட்டிடம்
சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது பூமி அதிர்ந்த அதிர்ச்சியில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளை பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக நகர்ந்து செல்கின்றனர். அப்போது அருகில் இருந்த ஒரு கட்டிடம் சரியும் சீட்டுக்கட்டு போல சரிந்து மண்ணோடு மண்ணாக விழுகிறது.
|
மிரள வைக்கும் காட்சிகள்
காண்போரை மிரட்சியடையச் செய்யும் இந்தக் காட்சிகளே பூகம்பத்தின் கோரத்தை விளக்குகின்றன. இதே போன்று மெக்சிகோவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
|
30 லட்சம் பேர் பாதிப்பு
மீட்புப் பணிகளுக்காக பேரிடர் மேலாண்மைக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாக உலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோரப் பேரழிவு
மெக்சிகோவில் கடந்த 1985-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த கோர பேரழிவு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
ட்ரம்ப் ஆறுதல்
இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர், இந்நிலையில் 2வது பேரழிவை மெக்சிகோ சந்தித்துள்ளது. இதனிடையே மெக்சிகோ நாட்டு மக்கள் பாதுகாப்புக இருக்க கடவுளை பிரார்த்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் மெக்சிகோ நாட்டிற்கு தேவையான உதவிகளை அமெரிக்க செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.