மாஸ்க் அணிய மாட்டேன்... ஊரடங்கை அறிவிக்க மாட்டேன்... அடம்பிடித்த மெக்ஸிகோ அதிருபக்கு கொரோனா
மெக்ஸிகோ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வலுவான நடவடிக்கைகளை எடுக்கத் தொடர்ந்து மறுத்து வந்த மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பிரிட்டன் வகை கொரோனா இதுவரை 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வகைகள் தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படுமா என்பது குறித்துத் தெளிவான முடிவுகள் இல்லை,
அதிபருக்கு கொரோனா
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு, மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர். இருப்பினும், மெக்ஸிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், கொரோனாவுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுக்க மறுத்து வந்தார். கொரோனா பாதிப்பு முடிந்துவிட்டது என்றும் கூறிவந்தார். இந்நிலையில், தற்போது அவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வழக்கம்போல செயல்படுவேன்
இத்தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததாகவும் அதைத்தொடர்ந்து மருத்துவ சோதனை மேற்கொண்டபோது கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதேநேரம் தனது வழக்கமான பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்க மறுத்தவர்
மெக்ஸிகோ நகரில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் அதற்கு மறுத்துவிட்டார். மேலும், மாஸ்க்கள் அணிவது ஒருவரது உரிமை என்றும் அதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது
உள் துறை அமைச்சருக்கு அதிகாரம்
67 வயதாகும் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதய பிரச்சனை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மெக்ஸிகோ நாட்டில் துணை அதிபர் இல்லை. மெக்ஸிகோ நாட்டில் அதிபர் உயிரிழந்தால், அவருக்குப் பின் உள் துறை அமைச்சருக்கே அதிபருக்கான அதிகாரங்கள் வழங்கப்படும். அடுத்த 60 நாட்களில் புதிய அதிபரை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்க வேண்டும்,
கொரோனா பாதிப்பு
மெக்ஸிகோ நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 20,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.52 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1,470 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 1.49 லட்சமாக உயர்ந்துள்ளது கொரோனா காரணமாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக மக்களை இழந்த நாடாக மெக்ஸிகோ உள்ளது.