பாறை என்று விடப்பட்டது மாயமான மலேசிய விமானத்தின் பாகமா?
நியூயார்க்: இந்திய பெருங்கடலில் நடத்தப்பட்ட தேடல் பணியின்போது பாறை என்று நினைத்துவிடப்பட்டது மாயமான மலேசிய விமானமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 238 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா தலைமையில் விமானத்தை தேடும் பணி ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அண்மையில் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால் பகுதி மாயமான மலேசிய விமானத்தினுடையது தான் என்று கூறப்பட்டது.
இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் சோனார் கருவி மூலம் தேடப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை சோனார் கருவி எடுத்த புகைப்படங்களை அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்சன் அன்ட் அசோசியேட்ஸ் என்ற புவியியர்பியல் கன்சல்டிங் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
ஆய்வில் சோனார் புகைப்படத்தில் தெரியும் உருவம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது. முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானம் 447ன் பாகங்கள் கடலுக்கு அடியில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் போன்றே தற்போது ஆஸ்திரேலியா தலைமையிலான குழு எடுத்துள்ள சோனார் புகைப்படங்கள் உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தில் விமானத்தை தேடும் பணி மீண்டும் நடக்க உள்ளது.