துரத்தி வந்த எமன்... அன்று மனைவி உயிர் தப்பினார்.. இன்று கணவர் உயிரிழந்தார்!
கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அதன் பணியாளரான இந்திய வம்சாவளி சீக்கியரான சஞ்சித் சிங் சந்துவின் கதை மிகச் சோகமாக உள்ளது.
இவரது மனைவியும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்தான். இவர் சில மாதங்களுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானத்தில் பயணித்திருக்க வேண்டியவர். அப்போது தனது பணியை இன்னொருவருக்கு மாற்றி விட்டதால், அதிர்ஷ்டசமாக தப்பினார்.
அதேபோல சந்துவும் இன்னொருவர் பார்க்க வேண்டிய பணியை தான் வாங்கிப் பார்க்கப் போய் இப்போது உயிரை விட்டுள்ளார்.
தப்பிய மனைவி.. சிக்கிய கணவர்
சந்துவின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு மாயமாகிப் போன மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானத்தில் பணியாற்றியவர்.
கடைசி நேர பணிமாற்றத்தால் உயிர் தப்பியது
அந்த விமானத்தில் கடைசி நேரத்தில் அவர் தனது பணி நேரத்தை மாற்றியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் தற்போது அவரது கணவரான சந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மனைவியைப் போலவே
அதேபோல சந்துவும் கூட எம்எச் 17 விமானத்தில் பயணிக்கும் திட்டத்தில் முதலில் இல்லை. ஆனால் தனது கோலாலம்பூரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை மாற்றி விட்டு இவர் பயணித்துள்ளார். ஆனால் விதி விளையாடி விட்டது. அன்று மனைவி தப்பினார்.. இன்றோ கணவர் மாட்டிக் கொண்டு விட்டார்.
சாப்பாடெல்லாம் வீணாகிப் போனதே
சந்துவின் தந்தை ஜிஜார் சிங் கூறுகையில், தனது மகனின் வருகையை எனது மனைவிதான் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தார். மகனுக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் செய்து வந்தார். ஆனால் அவன்தான் வராமலேயே போய் விட்டான் என்று கூறி கதறி அழுதார் ஜிஜார் சிங்.
ஒரே மகன்
சஞ்சித் சிங் சந்து, ஜிஜார் சிங்கின் ஒரே மகன் ஆவார். இவருக்கு ஒரே ஒரு சகோதரி மட்டுமே. மூத்த சகோதரியான அவர் இத்தாலியில் வசித்து வருகிறார். 41 வயதான சந்துவின் மரணம் ஜிஜார் சிங் குடும்பத்தை சிதறடித்துள்ளது.
இதயமே நொறுங்கிப் போய் விட்டது
ஜிஜார் சிங் மேலும் கூறுகையில், எனக்கு 71 வயதாகிறது. எனது மனைவிக்கு 73 வயது. என்னை விட 2 வயது மூத்தவர். இருவரும் வயோதிகத்தின் பிடியில் இருப்பவர்கள். சந்து எங்களுக்கு ஒரே மகன். இப்போது அவன் போய் விட்டான். எனக்கு 2 முறை பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. இதயமே நொறுங்கி்ப் போனது போல உணர்கிறேன். இனி நாங்கள் என்ன செய்யப் போகிறோம். நினைத்தாலே பதறிப் போகிறது என்றார் ஜிஜார் சிங்.