சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் – நிறைவேறாமலே போன விமானியின் “ஹஜ்” ஆசை!
கேமாமன்: உக்ரைன் வான்வெளியில் பறந்த போது ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் விமானி ஹஜ் யாத்திரை செல்ல ஆசையுடன் இருந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வான் அம்ரன் வான் ஹூசின் என்னும் 50 வயதானவர்தான், சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் முதன்மை விமானி.
இந்த வருட இறுதியில் ஹஜ் யாத்திரை செல்ல தயாராக இருந்தவர் அவர் என்ற விசயத்தை அவருடைய சகோதரியின் மகன் அமாலூதீன் நூர்ஷா தெரிவித்துள்ளார்.
கிராமத்திற்குப் போயிருந்தபோது
வான் ஐனி என்னும் தன்னுடைய மூத்த சகோதரியிடம் இந்த ஆசையை அம்ரன் தெரிவித்திருந்துள்ளார். கடந்த வாரம் கோட்டா லாமா கிரி என்னும் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்ற அவர் இதனை கூறியுள்ளார்.
கண்ணீர்க் கடலில் குடும்பம்
"எங்கள் குடும்பத்தினர் அனைவருமே விமானச் செய்தியினை அறிந்ததும் செயலிழந்து போய் விட்டோம்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் அமாலூதீன்.
20 வருட அனுபவம்
தன்னுடைய மாமா அம்ரன் கிட்டதட்ட 20 வருடங்களுக்கும் மேலாக விமானியாக பணிபுரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்பு நிறைந்தவர்
"தன்னுடைய சகோதரர்களிடம் மிகவும் பாசம் கொண்டவர். அறக்கட்டளைகளுக்கு வாரிக் கொடுக்கும் குணமுடையவர். அவருடைய மனைவியும், இரண்டு மகன்களும் ஷா ஆலமில் வசித்து வருகின்றனர்" என்று மேலும் கூறியுள்ளார்.
கருகிய உயிர்கள்
தங்களுடைய ஆசைகள் அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலேயே கருகிப் போகும் வகையில் உயிரை இழந்த ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்துவதுதான் மனிதர்களாய் இருக்கும் நம்முடைய உண்மையான தகுதி.