பக் ஏவுகணையால் தாக்கப்பட்ட மலேசிய விமான விசாரணை அறிக்கை: புல்லரிக்க வைக்கும் தகவல்கள்
ஆம்ஸ்டர்டாம்: உக்ரைனில் பக் ஏவுகணையால் தாக்கப்பட்ட மலேசிய விமானம் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கையில் வெளியாகியுள்ள சில தகவல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையில் பன்னாட்டு விசாரணை நடந்து வந்தது. அந்த குழு தனது இறுதி அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையின் 169வது பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
விமானி
விமானத்தை பக் ஏவுகணை தாக்கிய வேகத்தில் 2 விமானிகள் மற்றும் 2 துணை விமானிகள் பலியாகியுள்ளனர். விமானிகள் இறந்த பிறகு குறைந்தபட்சம் ஒன்றரை நிமிடத்திற்கு விமானம் நடுவானில் பறந்து அதன் பிறகு கீழே விழுந்துள்ளது.
பயணிகள்
விமானிகள் இறந்த பிறகு விமானம் பறக்கையிலேயே சில பயணிகள் மயங்கிவிட்டார்கள். என்ன நடக்கிறது என்பதை பயணிகள் உணர்வதற்குள் விமானம் கீழே விழுந்துள்ளது.
போன்
பயணிகள் விமானம் விழுவதை உணராததால் தான் கடைசி நிமிடத்தில் யாரும் தங்கள் பிரியமானவர்களுக்கு மெசேஜோ, செல்போனில் காலோ செய்யவில்லை. சிலர் மட்டும் இருக்கையில் உள்ள கைப்பிடியை கட்டியாக பிடித்துள்ளனர். ஒரு பயணியின் உடல் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி கிடந்தது.
காற்று
விமானம் உடைந்த பிறகு காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் இருந்திருக்கும். விமானத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் பறந்து பயணிகள் படுகாயம் அடைந்து தரையில் விழுந்திருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.