ஜெர்மனி அரசு மட்டும் எச்சரித்திருந்தால் உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காது
பெர்லின்: கிழக்கு உக்ரைன் வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று ஜெர்மனி அரசுக்கு தகவல் கிடைத்தும் அது யாரையும் எச்சரிக்காமல் விட்டதால் தான் மலேசிய விமானம் சுட்டுத் தள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பியது. விமானம் கிழக்கு உக்ரைனில் பறந்தபோது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் அதில் இருந்த 298 பேரும் உடல் சிதறி பலியாகினர். விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் சுட்டு வீழ்த்தினர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெர்மனி ஊடகங்களில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிழக்கு உக்ரைன் வழியாக பறக்கும் அனைத்து விமானங்களுக்கும் ஆபத்து என்று ஜெர்மனி அரசுக்கு அந்நாட்டு உளவுத்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அரசோ எந்த விமான நிறுவனத்திற்கும் இந்த தகவலை அளிக்கவில்லை.
ஜெர்மனி அரசு மட்டும் தனக்கு கிடைத்த தகவலை அனைவருடனும் பகிர்ந்திருந்தால் மலேசிய விமானம் கிழக்கு உக்ரைன் வழியாக சென்றிருக்காது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜூலை 17ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்ஸா நிறுவனத்தின் 3 விமானங்கள் கிழக்கு உக்ரைன் வழியாக சென்றுள்ளன.
இது குறித்து லுப்தான்ஸாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,
எங்கள் நிறுவனத்திற்கு அரசு உக்ரைன் பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் அந்த வழியாக விமானங்களை இயக்கி இருக்கவே மாட்டோம் என்றார்.