மலேசிய விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்த பக் ஏவுகணையால் தாக்கப்பட்டது: விசாரணை அறிக்கை
ஹேக்:
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்யப்பட்ட பக் ஏவுகணை வீசித் தான் தாக்கப்பட்டுள்ளது என்று நெதர்லாந்து தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிளம்பியது. விமானம் உக்ரைன் வான்வெளியில் செல்கையில் அது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதறி பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. அந்த குழு இன்று தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கை இந்திய நேரப்படி நாளை காலை 4.30 மணிக்கு வெளியிடப்படவிருந்தது. ஆனால் அறிவிக்கப்பட்டதற்கு சில மணிநேரம் முன்பாகவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
மலேசிய விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை வீசியே தாக்கப்பட்டுள்ளது. ஏவுகணை விமானத்தின் விமானி அறை அருகே ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் விமானி அறையில் இருந்த 3 பேர் பலியாகினர். மேலும் விமானத்தின் முன்பகுதி உடைந்தது. நடுவானில் விமானம் உடைந்தது. அதில் பெரிய பகுதி உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப்படையினர் இருக்கும் இடத்தில் விழுந்தது.
உக்ரைன் பயணிகள் விமானத்தை தனது வான்வெளியில் அனுமதித்திருந்திருக்கவே கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.