ரஷ்யா உதவியுடன் ஆதாரங்களை அழிக்க முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு
கிவி: ரஷ்யா உதவியுடன் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்யப்படுகிறது என்று உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் 298 பயணிகளுடன் மலேசிய விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து போயினர்.
இந்த இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் சிதைவுகளும், உயிரிழந்தவர்களின் உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. 181 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
யார் சுட்டு வீழ்த்தியது?
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கருப்பு பெட்டிகள் மீட்பு
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளையும் கைப்பற்றி உள்ளதாக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கறுப்பு பெட்டிகளை அவர்கள் பரிசோதனைக்காக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர்.
சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை
இந்த சோதனைக்கு பின்னர் விமானத்தில் கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வுகள் வெளியாகும். இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
விசாரணை
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு குழு விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணை குழு சென்றது. அவர்கள் அப்பகுதியை பார்வையிட்டனர்.
கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு
பின்னர் அவர்கள் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்ய முயன்றுள்ளனர். அதற்கு கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசாரணைக்குழுவை அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே செல்லவிடவில்லை. அதையும் மீறி அவர்கள் சென்றபோது கிளர்ச்சியாளர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
வானை நோக்கி துப்பாக்கி சூடு
அனுமதி அளிக்க கிளர்ச்சியாளர்கள் மறுத்ததை அடுத்து விசாரணைக் குழுவினர் அங்கிருந்து திரும்பிவிட்டனர். விமானம் விழுந்து கிடக்கும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
அனுமதி மறுப்பு
இதனால் விசாரணைக் குழுவினர் முழுமையான விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலேசியா குழுவும் கீவ் சென்றுள்ளது. இந்நிலையில் மலேசியா பிரதமர் நஜிப் ராசக் இவ்விவகாரம் தொடர்பாக ரஷ்யா அதிபர் புதினுடன் பேசியுள்ளார். அவர், முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று புதினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து ரஷ்யாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. உக்ரைன் குழுவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உதவியுடன் ஆதாரம் அழிப்பு?
இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் ரஷ்யா உதவியுடன் சர்வதேச குற்றத்தின் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.