உக்ரைனில் சுடப்பட்ட மலேசிய விமானத்தில் பலியான பெண்ணுக்கு எம்.பி.ஏ. பட்டம்
கோலாலம்பூர்: கிழக்கு உக்ரைனில் ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசிய விமானத்தில் பயணித்து பலியான எலிசபெத்துக்கு கோலாலம்பூர் பல்கலைக்கழகம் முதுகலை பட்டம் வழங்கியுள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி கிழக்கு உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
அந்த விமானத்தில் சென்று பலியானவர்களில் மலேசியாவைச் சேர்ந்த எலிசபெத் லியே டி என்பவரும் ஒருவர். இந்நிலையில் மலயா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்றது.
விழாவில் எலிசபெத்துக்கு எம்.பி.ஏ. பட்டம் வழங்கப்பட்டது. பட்டத்தை எலிசபெத்தின் அக்கா ஷி யான் பெற்றுக் கொண்டார். எலிசபெத் பட்டத்தை பெற இன்னும் ஓராண்டு படிக்க வேண்டி உள்ளது. இருப்பினும் அவருக்கு பட்டம் அளித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் ஈக்ரோடாட் முறைப்படி மாணவ, மாணவியர் யாராவது படிக்கையில் இறந்துவிட்டால் அவருக்கு பட்டம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.