மொசாம்பிக்கில் கிடைத்தது மாயமான மலேசிய விமான பாகங்களா?: ஆய்வை துவங்கிய ஆஸி.
சிட்னி: மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா என ஆய்வு செய்யும் பணி துவங்கிவிட்டதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா தலைமையில் விமானத்தை தேடும் பணி ஆண்டுக்கணக்கில் நடந்து வருகிறது. இருப்பினும் தேடல் நடக்கும் இடத்தில் விமான பாகம் எதுவும் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில் மொசாம்பிக்கில் 2 முறை விமான பாகங்கள் கரை ஒதுங்கின. அவை மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்பதை தெரிந்து கொள்ளும் ஆய்வு துவங்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் போயிங் நிறுவன நிபுணர்கள் விமான பாகங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வு முடிந்த உடன் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.