மலேசியா விமானம் எம்.ஹெச்.370 மாயமானதன் பின்னணியில் விமானியின் சதி- விசாரணையில் பகீர்
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம், விமானியின் சதி காரணமாகவே திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 மார்ச், 8ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. விபத்து நிகழ்ந்து 2 ஆண்டுகள் உருண்டோடியும், இதுவரை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடைபெற்றது.
எம்.ஹெச்.370 விமானம்
எம்.ஹெச்.370 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மலேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால்அவ்விமானத்தின் உடைந்த முக்கியப் பாகங்களை மீட்கும் வரையில் தேடும் நடவடிக்கைகளைத் தொடரும்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் இன்னமும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடரும் தேடுதல் வேட்டை
அதனை அடுத்து, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாக தேடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏறக்குறைய பெரும்பாலான பகுதிகள் முற்றாக அலசி ஆராயப்பட்டன. இருப்பினும், தேடும் பணிகளில் எம்.எச்.370 இன் உடைந்த பாகங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கிடைத்த பாகங்கள்
தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், மொரிசீயஸ், மற்றும் ரியூனியன் தீவுப் பகுதிகளில் விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டன. தொடக்கத்தில் அவை எம்.எச்.370 விமானத்தின் உடைந்த பாகங்கள் அல்ல என கூறப்பட்டாலும், நீண்ட ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பின்னர் அவை எம்.எச்.370 விமானதிற்கு சொந்தமானவை என உறுதிபடுத்தப்பட்டது.
விமானியின் சதி
விமானம் மாயமானது பற்றி கடந்த மாதம் நியூயார்க் இதழ், எம்.எச் 370 விமானி அஹமது ஷா-வின் சதியை அம்பலப்படுத்தியது. எனவே இது விபத்து அல்ல பெரிய அளவிலான கொலை-தற்கொலை நடவடிக்கை என்று எழுதியிருந்தது.
விமானம் கடத்தல்
எம்.ஹெச்.370 விமானத்தின் விமானி ஜஹாரி அஹமது ஷா சதிச் செய்து விமானத்தை கடத்தி இருப்பதாக அந்நாட்டு அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய மலேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய்,
விமானியின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிமுலேட்டர் கருவியில் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதி வழியாக விமானத்தை செலுத்துவதற்கான வழித் தடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
வழித்தடங்கள்
அதே சமயம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித் தடங்களை அந்த கருவியில் அவர் பதிவு செய்து வைத்துள்ளார். அதனால், விமானத்தை எந்த திசையை நோக்கி செலுத்தினார் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
உறுதியாக கூற முடியாது
மலேசியாவின் தேசிய போலீஸ் தலைமையான காலித் அபுபக்கர் கூறும்போது, கருப்புப் பெட்டி, பைலட் அறை குரல் பதிவு எந்திரம், தரவுப்பதிவு எந்திரம் ஆகியவை கிடைக்காமல் எதையும் சொல்ல முடியாது என்றார் ஆனால் பைலட் ஷாவின் தற்கொலை-கொலை முயற்சி என்பதையும் அவர் கொள்கை அளவில் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.