எம்.எச்.370: 239 பயணிகளுக்கும் இறப்பு சான்றிதழ் வழங்க மலேசிய அரசு முடிவு... சீன உறவினர்கள் எதிர்ப்பு
கோலாலம்பூர்: மாயமான விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் மரணமடைந்து விட்டதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கு சீனப் பயணிகளின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 8ம் தேதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 5 இந்தியர்கள் உட்பட 239 பேருடன் புறப்பட்டு சென்ற எம்.எச். 370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.
தொடர்ந்து வெளியான முரண்பட்ட தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. விமானம் விழுந்ததாக சந்தேகிக்கப் பட்ட இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
மாயமான விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வந்ததாகக் கூறப்பட்ட பிங் சமிக்ஞை கிடைக்கப் பட்ட இடத்திலும் தேடும் பணி தொடர்கிறது.
இந்நிலையில் மோசமான வானிலை மற்றும் பிற காரணங்களால் விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக விமானம் விபத்தில் தான் சிக்கியுள்ளது, கடத்தப்படவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த மலேசிய அரசு, தற்போது அதில் பயணம் செய்த 239 பயணிகளும் மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பயணிகளின் உறவினர்களை அழைத்து அவர்களிடம் விமானப்பயணிகளின் மரண சான்றிதழ்களை வழங்க முடிவு செய்தது. ஆனால், விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அறிவித்தபோதே, வெகுண்டழுந்து மலேசிய அரசு நாடகம் ஆடுவதாகக் குற்றம் சாட்டிய சீன பயணிகளின் உறவினர்கள் தற்போதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாயமான விமானத்தில் பயணம் செய்த 227 பயணிகளில் அதிகப்படியானோர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பயணிகளின் உறவினர்கள் விமான நிர்வாகத்தின் மீது வழக்கு தொடரவும் மலேசிய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதற்கிடையே விமானம் விழுந்ததாக சந்தேகிக்கப் பட்ட கடல்பகுதியை அலசிவிட்டதாகவும், இந்திய பெருங்கடலில் 4000 அடி ஆழம் வரையிலும், சுமார் 50,000 சதுர கி.மீ பரப்பளவில் தேடுதல் பணியை முடித்துவிட்டதாகவும் மீட்புப்படையினர்கள், தெரிவித்துள்ளனர்.
மேலும், தேடுதல் வேட்டையில் தோல்வி அடைந்துவிட்டதாக கூரிய மீட்புப் படையினர், ‘MH370 விமானம் கடலில் விழுந்ததா? என்பதே உறுதியாக தெரியாத நிலையில் இனிமேலும் கடலில் தேடிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இருக்கபோவதில்லை என்று தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
மலேசிய அரசும் தேடுதல் பணியை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.